07.02.2021 | ஆத்தும ஆதாயம் – தேவனாலே எல்லாம் கூடும் | Rev. Harris

07.02.2021

ஆத்தும ஆதாயம்.                                                                                                          

தேவனாலே எல்லாம் கூடும்

 

“அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து” (மத்தேயு 28:18-19). 

 

உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து பரமேறி செல்வதற்கு முன்பு அவருடைய சீஷர்களுக்கு இதைச் சொன்னார். உலகம் தேவனுடைய குடும்பமாக மாற வேண்டும் என்பதே அவரது பிரதான விருப்பமாயிருக்கிறது. இரட்சிக்கப்பட்ட தேவனுடைய ஜனங்களின் விருப்பமும் தேவனுடைய விருப்பத்தைப்போல உலகம் தேவனுடைய குடும்பமாக மாறுவதில் இருக்க வேண்டும். கிறிஸ்தவம் என்பது ஒரு மதமல்ல, அது இயேசுவின் அன்பின் நிமித்தமாக அவரை ஏற்றுக்கொண்டு சபைக்குச் செல்வது. இதனால் நம்முடைய வாழ்க்கை தான் வளமுள்ளதாக மாறும். ஆகவே ஆத்தும ஆதாயம் என்பது ஒரு உயர்தரமான பணியாகும்.

 

“அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி: உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள். ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்” (மத்தேயு 28:18-19).

 

ஆத்தும ஆதாயம் செய்யப் போவதற்கு முன்பு இயேசுவின் நாமத்தில் அந்த நபர்கள் ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்ல வேண்டும். ஏனெனில் இயேசுவின் நாமம் வானோர், பூதலத்தோர், பூமியின் கீழானோர் எல்லாருடைய முழங்கால்களும் முடங்கக்கூடிய ஒரு நாமமாய் இருக்கிறது. இதைத்தான் ஆண்டவர் இங்கு அவருடைய சீஷர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். தேவனுடைய சார்பில் நாம் இயேசுவினுடைய அதிகாரத்தை எடுத்துக்கொண்டு அழிந்துகொண்டிருக்கிற இந்த உலகத்திலே அழியாமையாகிய நித்தியஜீவனைப் பற்றி பிரசங்கிக்க நம்மை அதிகாரமுள்ளவராக்குகிறார். ஒருவேளை நம்மிடம் உலகப்பிரகாரமான அதிகாரம் எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இயேசுவின் நாமம் நம்முடைய வாயில் இருக்கும்போது அதிகாரம் நம்முடைய வாயில் இருக்கிறது.

 

“அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்” (மத்தேயு 19:16-17).

 

மனிதன் இறந்த பிறகு எங்கே போகப்போகிறான் என்ற ஒரு கேள்வி எல்லா மனிதருக்குள்ளும் இருந்துகொண்டே இருக்கிறது. அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்றாலும் சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்ற இயற்கையைப் பார்க்கும்போது தேவன் ஒருவர் இருக்கிறார் என்பது எல்லாருக்கும் தெரியும். யாருக்குமே சாக்குப்போக்குச் சொல்ல முடியாது. தேவன் மனிதனைப் படைக்கும்போதே அவனுக்குள் தம்மைப் பற்றிய உள்ளுணர்வை வைத்திருக்கிறார். அந்த தேவன் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டியது அவனுடைய பொறுப்பு. சங்கீதம் 19-இல் சொல்லப்பட்டிருப்பதைப்போல சூரியன், சந்திரன் போன்ற தேவனுடைய படைப்புகளுக்கு பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை. ஆனாலும் அவைகள் தேவனைப் பற்றி பேசாமல் பேசிக் கொண்டிருக்கிறது. அவைகள் என்ன பேசுகிறது? எங்களைப் படைத்தவர் ஒருவர் இருக்கிறார், மனிதனே, நீ மரிப்பதற்கு முன்பே அவரைப் பற்றி அறிந்துகொள் என்று பேசுகின்றன. நித்தியஜீவனைக் குறித்த ஒரு கேள்வி காலங்காலமமாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்களுக்குள் இருந்து கொண்டிருக்கிறது.

 

இங்கே ஒரு யூதன் இயேசுவினிடத்தில் வந்து இந்த கேள்வியைக் கேட்கிறான். ஆனால் தான் ஒரு பெரிய நீதிமான் என்பதை இயேசுவினிடத்தில் காண்பிக்க வேண்டும் என்பதே இவனுடைய பிரதான நோக்கமாய் இருந்தது. இயேசு அவனிடம் பத்து கற்பனைகளையும் கைக்கொள்ளச் சொல்லுகிறார்.

 

“அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறு வயது முதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான். அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்” (மத்தேயு 19:20-21).

 

கர்த்தர் யாரிடமும் உன்னுடைய சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு பரலோகத்திற்கு வா என்று சொல்லவில்லை. இவனிடம் மட்டும் தான் அப்படிச் சொன்னார். ஏனென்றால் இவன் பணத்திற்கு முதலிடம் கொடுத்து பணத்தை தன் ஆண்டவராக வைத்திருந்தான். இது கர்த்தருக்கு தெரியும். ஆனால் இவனோ, “நான் இந்த கற்பனைகளையெல்லாம் என் சிறுவயது முதல் கைக்கொண்டு வருகிறேன்” என்று சொல்லுகிறான். இது உண்மையில்லை. ஆதாம் முதல் இயேசுவின் காலம் வரை இயேசு மட்டுமே மனிதனாக வந்து மனிதன் என்கிற ரீதியிலே இந்த பத்து கற்பனைகளையும் கைக்கொண்டு புதிய ஏற்பாட்டை தொடங்கி வைத்தார். “வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் என் வார்த்தைகள் ஒழிந்துபோகாது” என்று இயேசு சொல்லுகிறார். அவர் நியாயப்பிரமாணத்தை ஒழிப்பதற்காக வரவில்லை, மாறாக அதை முழுவதுமாக நிறைவேற்றவே வந்தார். அவர் மட்டுமே முழுவதுமாக நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார்.

 

“அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்” (மத்தேயு 19:21-22).

 

இங்கே அந்த வாலிபன் தன் பணத்தின் மீது ஆசை வைத்திருந்த காரணத்தினால் போய்விட்டான். இவன் பணம் வைத்திருந்ததால் இயேசு அப்படிச் சொல்லவில்லை. இவனுக்கு பணத்தின் மீது மட்டுமே ஆசை இருந்தது. பணத்தையே தனது ஆண்டவராக முதலிடத்தில் வைத்திருந்தான். இதனை உணர்த்துவதற்காகவே இயேசு அப்படிச் சொன்னார். ஆனால் அவனுக்கு பணத்தின் மீது உள்ள இச்சையால் ஆண்டவரை ஏற்றுக்கொள்ள, நித்தியஜீவனை ஏற்றுக்கொள்ள மனதில்லை. இது நமக்கு ஒரு முன்னோட்டமாக எழுதப்பட்டிருக்கிறது. தேவன் பணத்திற்கு மரியாதை கொடுக்கிறார். இது ஒரு பண உலகம். பணம் நமக்கு தேவை என்று அவருக்கு தெரியும். ஆனால் பணத்திற்கு முதலிடம் இல்லை. கிறிஸ்தவ ஜீவியத்தில் தேவனுக்கு மட்டுமே முதலிடம் கொடுக்க வேண்டும். நாம் நித்தியஜீவனை எதினாலும் பெற்றுக்கொள்ள முடியாது. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நித்தியஜீவன் நம்முடைய பங்காக மாறும். இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார். சிலர், “பணக்காரர்களாய் இருந்தால் பரலோகத்தில் போக முடியாது” என்று சொல்லுகிறார்கள். ஆனால் நம்முடைய ஆண்டவர் மிகப்பெரிய பணக்காரர். அவர் நம்மை தரித்திரத்திலிருந்து மீட்டெடுக்கவே ஏழ்மைக்கோலத்தில் ஒரு மனிதனாக பூமிக்கு வந்தார். பரலோகத்தை ஒப்பிடும்போது உலகம் ஒன்றுமே கிடையாது. பரலோகம் என்பது தங்க வீதிகளும், ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டதும், ஒருவரும் கற்பனை கூட செய்து பார்க்காததுமான மிகப் பிரம்மாண்டமான இடம். ஆகவே பணத்தின் மீது உள்ள நம்பிக்கையே அவனை அழிவுக்கு உள்ளாக்குகிறது. கிறிஸ்தவ ஜீவியம் என்பது பணத்தைச் சுற்றியோ, அல்லது ஜெபம், உபவாசம் போன்றவற்றையோ சுற்றிச் சுழலவில்லை. அது இயேசுவை சுற்றிச் சுழலுகிறது.

 

“அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார். சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது!” (மாற்கு 10:23-24).

 

இயேசு, “ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது” என்று சொல்லுகிறார். சீஷர்கள் அதைக் கேட்டு ஆச்சரியப்படுகிறார்கள். இயேசு அதற்கு விளக்கம் கொடுக்கிறார். ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாய் இருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்கிறார். ஆகவே ஐசுவரியம் இருப்பது தவறல்ல. வேதத்தில் தேவன் தம் பிள்ளைகள் ஒருவரைக்கூட ஏழையாக ஆக்கவில்லை, அவர் எல்லாரையும் பணக்காரர்களாக ஆக்கிவிட்டார். ஆபிரகாம் ஒன்றுமில்லாதவனாக இருந்தான். மண் பொம்மையில் கலர் சாயம் பூசி தெருத் தெருவாகச் சென்று விற்று வயிற்றுப் பிழைப்பு நடத்தினான். ஆனால் கர்த்தர் அவனை செல்வச்சீமானாக மாற்றிவிட்டார். இதுபோன்ற பல ஆதாரங்களை வேதத்தில் நாம் பார்க்கிறோம். அவரிடம் வந்த எல்லாரும் பணக்காரராக ஆனார்கள். ஏனென்றால் ஏழைகளை பணக்காரர்களாக ஆக்குவதற்காகத்தான் இயேசு இந்த பூலோகத்திற்குள்ளே வந்தார்.  இயேசு இந்த வசனத்தில் ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைக்கிறவர்கள் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பது கடினம் என்கிறார். அவர் அதற்கு தரும் விளக்கத்தைக் கவனியுங்கள்.

 

“ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்” (மாற்கு 10:25).

 

ஐசுவரியத்தின் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது ஒட்டகமானது ஊசியின் காதுக்குள் நுழைவதைக் காட்டிலும் மிகவும் கஷ்டம் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஏனென்றால் மனுஷன் பணத்துக்காக உண்டாக்கப்பட்டவன் அல்ல, பணம் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது. 1 தீமோத்தேயு 6:10-இல், “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லப்பட்டுள்ளது. நம்மிடம் உள்ள எல்லாமே கர்த்தர் கொடுத்த ஈவு. மனைவி கர்த்தர் கொடுத்த ஈவு. ஆனால் மனைவியின் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்து கர்த்தருடைய வார்த்தையை தூக்கி தூர வைத்துவிட்டால் அதன்பிறகு பிரச்சனைகள் குடும்பத்தை ஆண்டுக்கொள்ளும். அதை தவிர்க்க முடியாது. உங்களுடைய நம்பிக்கை யார் மீது இருக்கிறது என்பதை ஆராய்ந்து பாருங்கள். பணத்தை கர்த்தர் தான் கொடுத்திருக்கிறார். அதை ஒரு கருவி போல பயன்படுத்தும்படி தந்திருக்கிறார். “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது” என்று சொன்ன கர்த்தர் அதே அதிகாரத்தில் இன்னொரு வசனத்தையும் சொல்லுகிறார். அதைப் பார்ப்போம்.      

 

“இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்” (1 தீமோத்தேயு 6:17-19).

 

இங்கே ஐசுவரியவான்களை சபையிலிருந்து துரத்திவிடு என்று சொல்லவில்லை. மாறாக, அவனுக்கு சில பாடங்களை கற்பிக்கும்படியாக கூறுகிறார். ஐசுவரியத்தின் மீது நம்பிக்கை வைக்காதே, அதை வைத்து நன்மை செய், ஏழைகளுக்குக் கொடு என்கிறார். மேலும் அதை வைத்து நித்தியஜீவனுக்கென்று ஒரு அஸ்திபாரத்தை இப்பொழுதே கட்டு என்று அடுத்த வசனத்தில் சொல்லுகிறார்.

 

“நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு” (1 தீமோத்தேயு 6:18-19).

 

கர்த்தர் கொடுத்திருக்கிற பணத்தை வைத்து நித்தியஜீவனுக்கென்று ஒரு அஸ்திபாரம் போடுவதற்காக உபயோகிக்கலாம். நாம் மரித்த பிறகு இந்த அஸ்திபாரத்தைப் போடவே முடியாது. பணத்தை நமக்கென்று சுயநலமாக சேமித்து வைத்துவிட்டுச் சென்றால் அது நம்மோடுகூட வராது. அது அஸ்திபாரம் இல்லாத கட்டிடத்தைப்போல மண்ணின் மேல் நின்று கொண்டிருக்கும். ஏனென்றால் நீங்கள் தான் அஸ்திபாரம் போடவில்லையே! கர்த்தருக்காக எந்த ரீதியில் பிரயோஜனமாக அஸ்திபாரம் போடலாம் என்பதை ஆராய்ந்து பார்த்து, வழிகளைத் தேடி சரியான வழியிலே பணத்தை செலவழிக்க வேண்டும். நித்தியஜீவன் இனி வரப்போகிறது. பணத்தை வைத்து இப்போதே அதற்காக அஸ்திபாரம் போடலாம். அதற்காகத்தான் கர்த்தர் பணத்தைக் கொடுத்திருக்கிறார்.

 

இன்றைக்கு அநேகர், “நீ பணக்காரனாக இருந்தால் பரலோகத்திற்கே போகமாட்டாய், ஏனென்றால் இயேசுவே அப்படிச் சொல்லிவிட்டார். உன்னிடம் பணம் இருந்தால் ஒட்டகமானது ஊசியின் காதுக்குள் போவதைப்போல நீ பரலோகத்தின் வாசலுக்குச் சென்றாலும் உள்ளே நுழையமுடியாது” என்று பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த இடத்தில் இயேசு பரலோகத்தைப் பற்றியே பேசவில்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். வேதத்தை வாசிக்கும்போது ஜெபத்தோடும், ஆவியானவரின் உதவியோடும் வாசிக்க வேண்டும். இந்த இடத்தில் இயேசு எதைப் பற்றி பேசுகிறார் என்பதை கவனிக்க வேண்டும்.   

 

“அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்.” (மாற்கு 10:23).

 

இங்கு இயேசு பரலோகத்தில் பிரவேசிப்பதைப் பற்றி சொன்னாரா? இல்லை. தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்கிறார். அடுத்த வசனத்தைக் கவனியுங்கள்.

 

“சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது!” (மாற்கு 10:24).

 

இங்கு அவர் பரலோகத்தைப் பற்றி பேசவில்லை, தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசுகிறார். தேவனுடைய ராஜ்யம் என்பது விஸ்தாரமான ஒரு பதம். இயேசு கிறிஸ்துவை உள்ளத்திலே ஏற்றுக்கொள்ளுகிற அந்த நாளிலிருந்து ஆரம்பித்து நித்தியம் வரைக்கும் அது போகிறது. ஆனால் இந்த இடத்தில் கர்த்தர் இரட்சிப்பைப் பற்றி பேசுகிறார் என்பதை திட்டமாய் தெரிந்துகொள்ளுங்கள். கர்த்தர் என்ன சொல்லுகிறார் என்றால், ஒருவன் ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வைத்தால், அவன் கர்த்தர் மீது நம்பிக்கை வைக்கவில்லை. கர்த்தர் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்றால், இயேசுவே, நீர் என் ஆண்டவர் என்று வாயினால் உண்மையாக சொல்லமாட்டான்; தேவன் இயேசுவை நரகத்திற்குள்ளிருந்து எழுப்பினார் என்று உள்ளத்திலே விசுவாசிக்கமாட்டான். ஏனென்றால் அவனுடைய எண்ணங்கள் முழுவதும் பணத்தின் மீது தான் இருக்கிறது. ஆகவே அவன் இரட்சிக்கப்படுவது கஷ்டம் என்று ஆண்டவர் சொல்லுகிறார். 26-ஆம் வசனத்தைப் பாருங்கள்.   

 

“அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குளே சொல்லிக்கொண்டார்கள்” (மாற்கு 10:26).

இவ்வளவு நிபந்தனைகள் இருந்தால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று சீஷர்கள் ஆச்சரியப்பட்டார்கள். கிறிஸ்தவர்கள் வேதத்தை சரியாக வாசிக்காமல், தங்களுடைய சபை உபதேசங்களை கட்டியெழுப்பவும், மக்களை நரகத்திற்கு அனுப்பவும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். சீஷர்கள் கேட்ட இந்த கேள்விக்கு இயேசு அடுத்த வசனத்தில் பதில் சொல்லுகிறார்.

 

“இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்” (மாற்கு 10:26).

 

இயேசு சொல்லுவதைக் கவனியுங்கள். பணக்காரர்கள் இரட்சிக்கப்படுவது கஷ்டம் தான். ஆனால் தேவனுடைய கிருபை இருந்தால் அந்த பணக்காரன் கூட இரட்சிக்கப்பட்டு விடுவான். அப்படித்தான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோபு போன்ற பணக்காரர்கள் இந்த உலகத்திலும் பணக்காரர்களாய் இருந்தார்கள், அந்த உலகத்திலும் அவர்கள் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். நீங்களும் அப்படியிருக்க விரும்புகிறீர்களா? எத்தனையோ கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தில் பிச்சைக்காரர்களாக இருக்க விரும்புகிறார்கள். ஏனென்றால் பரலோகத்தில் எப்படியாவது ஒரு இடத்தைப் பிடித்து விட வேண்டும் என்று இவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் பரலோகம் கர்த்தருடையது, அங்கு நாம் இடம் பிடிக்க முடியாது. அங்கு பணக்காரர்களும் இருக்கிறார்கள், ஏழைகளும் இருக்கிறார்கள். பணக்காரன் பரலோகத்திற்கு வருவது கஷ்டம் என்று அவன் பயந்துகொண்டிருக்கும்போது கர்த்தர் சொல்லுகிறார், என்னுடைய கிருபை உனக்கு இருந்தால் நீ பணத்தை துட்சமாக எண்ணுவாய். அப்படிப்பட்ட ஒரு மனநிலையை என்னால் உருவாக்க முடியும். எதையும் செய்கிறவர் தான் நம்முடைய கர்த்தர்.

இந்த அதிகாரம் முழுவதும் நிறைய சத்தியங்கள் இருக்கின்றன. 28-ஆம் வசனத்தைப் பாருங்கள்.

 

“அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான்” (மாற்கு 10:28).

 

இவன் எதை விட்டான்? பெரிய அரண்மனையை விட்டானா? ஒரு ஒரு படகை மட்டும் விட்டு வந்தான். அந்த ஒன்றை விட்டதற்கு இயேசு அவனுக்கு கொடுக்கும் பலனைப் பாருங்கள்.

 

“அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்திமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மாற்கு 10:29-30).

 

அவனுக்கு கிடைக்கும் பலன் என்ன? இந்த உலகத்தில் நூறத்தனையாக பலன் வருகிறது, மறுமையிலே நித்தியஜீவன் கிடைக்கிறது. நான் உங்களுக்கு வேதத்திலிருந்து பரலோகத்தைப் பற்றி வாசித்துக் காண்பிக்கப்போகிறேன்.

 

“அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது” (வெளிப்படுத்தல் 21:16).

ஒரு ஸ்தாதி என்பது எட்டு மைல் தூரம். அப்படியென்றால் பரலோகத்தின் நீளம் 1500 மைல், அகலம் 1500 மைல். ஆண்டவர் வாழுகிற நகரத்தின் மொத்த பரப்பளவு 1500 மைல் x 1500 மைல். அப்படியென்றால் மொத்தப் பரப்பளவு 22,50,000 சதுர மைல். அது எவ்வளவு பெரிய பட்டணம் என்று பாருங்கள்! அது மொத்தமும் சுத்தப் பொன்னாயிருந்தது. அடுத்த வசனங்களைப் பாருங்கள்.

 

“அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்தபளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது. நகரத்து மதிலின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம், ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே” (வெளிப்படுத்தல் 21:18-20).

 

அலங்காரம் என்றால் பாவம் என்று கிறிஸ்தவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் இங்கு தேவனே அலங்கரித்து வைத்திருக்கிறார் என்று வாசிக்கிறோம். இவ்வளவு பெரிய பணக்கார தேவன் நமக்காக இந்த உலகத்திலே ஏழையானார். ஏன்? நம்மை தரித்திர குழியிலிருந்து தூக்கி, ஐசுவரியவானாக மாற்றும்படியாக. அவர் வாழ்நாள் முழுவதும் தரித்திர பாதையில் தான் வாழ்ந்தார். சிலுவை தான் அதன் உச்சக்கட்டம். அவர் தன் அரையில் கட்டியிருந்த துண்டையும் பிடுங்கிவிட்டார்கள். அவர் நிர்வாணமாக தொங்கினார். அது அவர் செய்த தியாகத்தில் மிக மிக அதிகம். இதற்காக கர்த்தருக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.

 

Book your tickets