21.03.2021 | ஆத்தும ஆதாயம் – ஆஸ்திகளால் கர்த்தருக்கு ஊழியஞ்செய்வது – 6 | Rev. Harris

“அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து” (மத்தேயு 28:18-19). 

 

உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து சீஷர்களை கடைசி முறையாக இங்கே சந்திக்கிறார். அப்போது ஒரு கட்டளையைக் கொடுக்கிறார். அதாவது, “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் எனக்குச் சீஷராக்குங்கள்” என்று சொன்னார். தேவன் நம்மீது வைத்த அன்பினாலே நமக்கு எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்தார். இயேசு நம்முடைய பாவங்களுக்காக தண்டிக்கப்பட்டு, இரத்தஞ்சிந்தி, பாதாளம் சென்று, அக்கினியிலே தகிக்கப்பட்டு, பின் மூன்றாம் நாள் உயிரோடெழுந்தார். பிறகு நமக்கு பரிசுத்த ஆவியைக் கொடுத்தார். இவை ஒன்றிற்குமே நாம் தகுதியுள்ளவர்கள் அல்ல. பிதாவாகிய தேவன் இயேசுவின் முகத்தைப் பார்த்து இந்த நன்மைகளையெல்லாம் நமக்குச் செய்திருக்கிறார். ஆகவே நம்முடைய வாழ்க்கையின் எல்லா நேரத்திலும் நாம் இயேசுவுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

 

கிறிஸ்தவம் என்பது ஒரு மதம் அல்ல, அது ஒரு மார்க்கம். ‘மார்க்கம்’ என்றால் ‘வழி’ என்று அர்த்தம். நாம் நித்தியஜீவனை அடைவதற்கான வழி தான் இயேசு கிறிஸ்து. நம்முடைய உலக வாழ்க்கைக்குப் பிறகு அதாவது நாம் மரித்த பின்பு ஒரு நித்திய வாழ்க்கை இருக்கிறது. அதில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் நித்தியஜீவனைப் பெற்று கிறிஸ்துவோடுகூட நித்தியமாய் வாழுவார்கள். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களோ நரக அக்கினியிலே போடப்படுவார்கள். இயேசு கிறிஸ்து பல கடவுள்களில் ஒருவர் அல்ல. அவர் வானத்தையும், பூமியையும் படைத்த சிருஷ்டி கர்த்தர், அவரே தேவன். அவர் நம்மீது அன்பாகவே இருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. ஆவி உலகம் என்பது காலத்திற்கு அப்பாற்பட்டது. நம்முடைய தேவனுக்கு ஆயிரம் வருஷடங்கள் ஒரு நிமிடம் போல் இருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே நம்முடைய வாழ்க்கையை அவருக்காக வாழ வேண்டும். இன்றைக்கு பலருடைய ஜெபங்கள், “தேவனே, இதைச் செய்யும், இதைத் தாரும்” என்ற அளவில் தான் இருக்கிறது. ஆனால் நம்முடைய ஆண்டவர் ஏற்கனவே எல்லாவற்றையும் கல்வாரி சிலுவையில் செய்து முடித்துவிட்டார். இயேசுவின் நாமத்தினாலே நம்முடைய சுகம், வெற்றி, ஐசுவரியம், சமாதானம், சந்தோஷம் என எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள வேண்டும். சில சமயம் நம்முடைய ஜெபங்களுக்கு பதில் வரவில்லை என்றதுமே சோர்வு வந்துவிடுகிறது. ஆனால் அடையாளம் வேண்டுமானால் மாறும், ஆண்டவர் ஒருபோதும் மாறமாட்டார். ஒருவேளை சுகமடைந்ததற்கான அடையாளம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது சத்தியம் இல்லை. இயேசுவின் மூலம் நாம் சுகத்தைப் பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிப்பதே சத்தியம். உண்மை வேறு, சத்தியம் வேறு. உண்மைகள் மாறலாம், ஆனால் சத்தியம் ஒருபோதும் மாறாது. “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று இயேசு சொன்னார். ஆகவே அவர் சொல்லியிருக்கிற வார்த்தைகள் நிச்சயமாக நம்முடைய வாழ்க்கையில் நிறைவேறும். “என் வசனம் ஒருநாளும் வெறுமையாய்த் திரும்பாது. நான் விரும்பின காரியத்தை அது செய்யும்” என்று தேவன் சொல்லியிருக்கிறார். பரலோகத்தில் தேவனுடைய வலதுபாரிசத்தில் ஒரு மனிதன் இருக்கிறார், அவர்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவர் நமக்காக இரவும் பகலும் பரிந்துபேசிக் கொண்டிருக்கிறார். தேவனாய் இருந்தவர் மனிதனாக மாறினார். ஆனால் அவர் மறுபடியும் தேவனாக மாறவில்லை. மனிதனாக இருப்பது மிகமிக அற்பமான காரியம். முதல் ஆதாம் தோற்றுப்போனவன். பின் இரண்டாம் ஆதாமாக இயேசு கிறிஸ்து வந்தார். அவர் தோற்கவில்லை. அவர் எல்லாவற்றையும் ஜெயித்து, உயிர்த்தெழுந்து பிதாவின் வலதுபாரிசத்தில் உட்கார்ந்து நமக்காக பரிந்துபேசிக் கொண்டிருக்கிறார். நாம் நன்றாக இருக்கக்கூடாது என்பதுதான் பிசாசின் அடிப்படை நோக்கமாயிருக்கிறது. அவன் எல்லாவற்றிற்கும் ஒரு தடையைக் கொடுக்கிறான். இந்த உலகத்தில் காரியங்கள் நடப்பதைக் காட்டிலும், முதலில் ஆவி உலகத்தில் நடப்பதற்கு விசுவாசப் போராட்டம் தேவை. “விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு” என்று வேதம் சொல்லுகிறது. விசுவாசம் தேவனுடைய வசனங்களைக் கேட்பதினால் வரும். ஆகவே விசுவாசமும் வசனமும் ஒன்று. விசுவாசம் என்பது ஏதோ ஒரு இரகசியமான விஷயம் அல்ல. தேவன் வேதத்தின் மூலமாக எல்லாவற்றையும் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். தேவனுக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ அதே அதிகாரத்தை நமக்கும் கொடுத்திருக்கிறார். “ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய், இந்த அதிகாரத்தோடு சர்வ சிருஷ்டியையும் என்னுடைய அன்பின் சீஷராக்குங்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

 

“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபேசியர் 1:3).

 

அவர் சாத்தானிடமிருந்த சகல அதிகாரங்களையும் பிடுங்கி நம்மிடம் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், சகல ஆசீர்வாதங்களாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். ஆகவே நாம் ஜெபிப்போமா, தோல்வியடைவோமா என சந்தேகப்பட தேவையில்லை. சாத்தானிடமிருந்த அதிகாரங்கள் அனைத்தையும் இயேசு கிறிஸ்து பறித்துக்கொண்டு அவர் வைத்திருக்கிறார். ஆதாம் இழந்துபோன எல்லாவற்றையும் அவர் மீட்டுக்கொண்டார். ஆகையால் அந்த கிறிஸ்துவினுடைய அதிகாரத்தைத்தான் அவர் நமக்கு கொடுத்தார். எனவேதான் அவர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்”. நாம் சபையில் போதகருக்காக ஆள் சேர்ப்பதில்லை. நாம் இயேசுவுக்காக ஆள் சேர்க்கிறோம். இதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. சபை போதகர் வேறு, இயேசு கிறிஸ்து வேறு. இயேசு கிறிஸ்து நமக்காக தன்னுடைய கடைசி சொட்டு இரத்தம் வரை கல்வாரி சிலுவையில் சிந்தி இரட்சிப்பையும், நித்தியஜீவனையும் தந்திருக்கிறார். “இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்” என்று இயேசு சொன்னார். இந்த உலகத்திலேயே பெரிய வேலை ஆண்டவருடைய வார்த்தைகளை பிரசங்கிப்பது ஆகும். இயேசு அதற்காகவே வந்தார். அது விலையேறப்பெற்றது. இந்த உலகத்தில் சிறிய காரியங்கள் எல்லாம் பெரிதாய் தெரிகிறது. ஆனால் சத்தியம் என்னவென்றால், அவருடைய வார்த்தைகளைப் பிரசங்கிப்பது தான் மிகப்பெரிய உன்னதமான பணியாகும். ஆகவே நாம் ஊழியம் செய்யப்போகும்போது, தலைகுனிந்து வெட்கப்பட்டுக்கொண்டு போகத் தேவையில்லை. அதிகாரத்தோடு தலைநிமிர்ந்து செல்ல வேண்டும்.

 

“அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது, அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டுவாருங்கள். ஏன் இப்படிச்செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்” (மாற்கு 11:1-3).

 

இங்கே “இயேசு ஆண்டவருக்கு வேண்டும்” என்ற பதம் வந்திருக்க வேண்டும். ஆனால் ஆண்டவர் என்றால் அவர் ஒரே ஒருவர்தான். அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டும்தான். அதனால்தான் இங்கே “ஆண்டவருக்கு வேண்டும்” என்ற பதம் வருகிறது. இங்கே சீஷர்கள் கழுதைக்குட்டியை அவிழ்க்கும்போது, “இது ஆண்டவருக்கு வேண்டும்” என்று சொன்னார்கள். உடனே அவன் அனுப்பிவிட்டான். ஆகவே ஆத்தும ஆதாயம் செய்யும்போது, “இயேசுவின் நாமத்தினால் இவர்கள் ஆண்டவருக்கு வேண்டும்” என்று சொல்லும்போது அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்.

 

பால் யாங்கி சோ என்ற உலகப் புகழ்பெற்ற போதகர் வட கொரியாவில் ஊழியம் செய்து வருகிறார். அவரது சிறுவயதில் T.B நோயின் காரணமாக தகப்பனால் கைவிடப்பட்டு, தனது மாமாவின் வீட்டுத் திண்ணையில் அடைக்கலமானார். ஆனால் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஒருநாள் பள்ளியில் படிக்கும் ஒரு சிறுபெண் அவரிடம் புதிய ஏற்பாடு புத்தகத்தைக் கொடுத்தாள். அதை வாங்கிப் படித்த யாங்கி சோ இரட்சிக்கப்பட்டார். பின்னர் ஊழியம் செய்து தற்போது 7 லட்சத்து 50 ஆயிரம் ஜனங்கள் உள்ள சபைக்கு போதகராய் இருக்கிறார். இங்கே கர்த்தர் அந்த சிறுபெண்ணிடம், “அவரிடம் சென்று இந்த புத்தகத்தைக் கொடு, அவர் மிகப்பெரிய ஊழியக்காரராய் வருவார்” என்று எதிர்கால திட்டங்கள் எதையுமே சொல்லவில்லை. அந்த சிறுபெண் எப்போதும் ஊழியம் செய்வது போல அந்தப் புத்தகத்தை அவரிடம் கொடுத்தார். ஆனால் காலம் நிறைவேறினபோது ஆண்டவரின் திட்டங்கள் நிறைவேறினது. அதுபோலவே நாம் இன்றைக்கு ஊழியம் செய்யும்போது இரட்சிக்கப்படும் ஆத்துமாக்கள் நாளை எவ்வளவு பெரிய ஊழியக்காரர்களாக வருவார்கள் என்று நமக்குத் தெரியாது. அந்த சிறுபெண் வாங்கிக் கொடுத்த புதிய ஏற்பாடு 20 ரூபாய் தான் இருக்கும். ஆனால் அதன் மூலம் 7 லட்சத்து 50 ஆயிரம் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டார்கள். மிகப்பெரிய பால் யாங்கி சோ என்ற ஊழியக்காரரும் உருவாக்கப்பட்டார். இதைப் பார்க்கும்போது ஊழியத்தில் 20 ரூபாயாக இருந்தாலும் எவ்வளவு பணமாக இருந்தாலும் அது ஒன்றுமேயில்லை. ஆகவே நாம் ஆத்தும ஆதாயத்தில் பணத்தை செலவிடும்போது தேவனுடைய ராஜ்யம் கட்டப்படுகிறது.

 

பேதுருவினுடைய சகோதாரன் அந்திரேயா. அவன் பேதுருவை கர்த்தரிடம் அழைத்துக்கொண்டு சென்றான். அப்போது இயேசு அவனைப் பார்த்து, “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ இனி கேபா என்னப்படுவாய்” என்றார். ‘சீமோன்’ என்றால் ‘காற்றில் அசைகிற நாணல்’ என்று அர்த்தம். ‘கேபா’ என்றால் ‘அசைக்கப்பட முடியாத கன்மலை’ என்று அர்த்தம். இவற்றைப் பற்றி அந்திரேயாவுக்கு ஒன்றும் தெரியாது. ஆகவே நாம் ஊழியம் செய்யும்போது ஒருவரைப் பற்றிய எதிர்கால நோக்கங்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் சில காலங்கள் கடந்து நாமே ஆச்சரியப்படும் அளவிற்கு பெரிய காரியங்கள் அந்த நபரின் மூலமாய் நடக்கலாம். இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு நாம் ஊழியம் செய்ய வேண்டும். நாணலைப்போல இருந்த சீமோனாகிய பேதுரு இரட்சிக்கப்பட்டு கேபாவாய் மாறினான். அவன் ஊழியஞ்செய்யும்போது ஒரு பிரசங்கத்திலேயே 3000 பேர் இரட்சிக்கப்பட்டார்கள். இந்த பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்த அந்திரேயாவால் எத்தனை பேர் இரட்சிக்கப்பட்டார்கள் என்று தெரியாது. ஆனால் பேதுரு ஊழியஞ்செய்யும்போது அநேக ஆயிரம் மக்கள் இரட்சிக்கப்பட்டார்கள். ஆகவே நீங்கள் ஒரு நபரை ஆத்தும ஆதாயம் செய்து சபைக்கு அழைத்து வரும்போது அவர்களால் எத்தனை பேர் இரட்சிக்கப்படப் போகிறார்கள் என்பது நமக்கு தெரியாது. அதற்காக நாம் செலவழிக்கும் பணம் ஒன்றுமேயில்லை. நாம் நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறோம்.

 

சிலர், “ஐசுவரியவான் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பது அரிது” என்று சொல்லுகிறார்கள். ஆனால் ஐசுவரியவானாயிருந்தாலும், ஏழையாயிருந்தாலும் நித்தியஜீவனாகிய இயேசு உள்ளத்திற்குள் இருந்தால் தான் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று இயேசு சொன்னார். ஆகவே இந்த உலகத்திலே மரித்தாலும் நமக்காக நித்தியமான வாழ்வு இருக்கிறது. கிறிஸ்தவ ஜீவியம் என்பது அதிகதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போல் இருக்கிறது. “நீதிமானுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்” என்று வேதம் சொல்லுகிறது. நித்தியமான உலகம் இந்த உலகத்தைக் காட்டிலும் ஆயிரமாயிரம் மடங்கு பெரியது. நம்முடைய ஆண்டவர் மிகவும் சிறந்தவற்றையே நமக்கு தருகிறார். தேவனுடைய வார்த்தை இந்த சிறிய உலகத்தில் பெரிய மாற்றங்களைச் செய்யும். அது ஒருக்காலும் விருதாவாய் திரும்பாது. அது விரும்பினதைச் செய்து அனுப்பின காரியமாய் வாய்க்கும் என்று வேதம் சொல்லுகிறது. அநேகருடைய தோல்வி அவர்களுடைய வாயில் தான் இருக்கிறது. ஆகவே சூழ்நிலையைப் பற்றி பேசக்கூடாது. அது எப்படியிருந்தாலும் கர்த்தருடைய வார்த்தையைப் பேச வேண்டும். “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று இயேசு சொன்னார். கிறிஸ்து தலையாய் இருக்கிறார், நாம் சரீரமாய் இருக்கிறோம். நாம் அவரோடு இணைந்துள்ளோம். எனவே நாம் தைரியத்தோடு இயேசுவின் அன்பைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். இது ஒரு ஆசீர்வாதமான பெரிய ஊழியம். நாம் இயேசுவைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லும்போது அவர் நம்முடைய குடும்பத்தை ஆசீர்வதிப்பார். ஆண்டவரைப் பற்றிச் சொல்லும்போது வெட்கப்படக்கூடாது. உலகத்திலேயே விலையேறப்பெற்றது ஆண்டவருடைய வார்த்தை தான்.

 

தேவன் மனிதனைப் படைக்கும்போது இரண்டு விதமான உயிர்களைக் கொடுத்தார். ஒன்று நாசியில் உள்ள உயிர். இதற்கு கிரேக்க மொழியில் ‘சுகே’ என்று பெயர். இரண்டாவதாக, ஆவியில் நித்தியஜீவன் என்ற உயிரைக் கொடுத்தார். இதற்கு கிரேக்க மொழியில் ‘Zoe’ என்று பெயர். வேறு எந்த உயிரினங்களுக்கும் இது கொடுக்கப்படவில்லை. தேவன் மனிதனுக்கு மட்டுமே நித்தியஜீவனைத் தந்தார். இந்த மனிதனைப் பார்த்துதான் தேவன் பூமி அனைத்தையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொன்னார். நாசியில் இருக்கும் வெளிசுவாசத்தைக் கொண்டு இந்த பூமியை ஆள முடியாது. மனிதனுக்குள் ஆவியில் இருக்கும் நித்தியஜீவனாகிய தேவனுடைய ஜீவனைக் கொண்டு ஆள முடியும். அதைப் பார்க்கும்போது மற்ற உயிரினங்கள் மனிதனைப் பார்த்து பயந்தன. தேவன் அப்படிப்பட்ட ஆளுகையை மனிதனுக்கு கொடுத்தார். ஆகவேதான், “நீர் அவனை தேவனிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்” என்று சங்கீதம் சொல்லுகிறது. அநேக வேளைகளில் அவர் தேவன், நாமோ தூசி, குப்பை என்று நினைக்கிறோம். அது ஒருவிதத்தில் உண்மை என்றால், இன்னொரு விதத்தில் தேவன் இந்த குப்பைகளை எடுத்து அவருடைய அதிகாரத்தை தந்திருக்கிறார். அவர் கிறிஸ்து, இரட்சிக்கப்பட்ட எல்லோரும் கிறிஸ்துவினுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவருக்கு என்ன அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதே அதிகாரம் நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவன் தமக்குள்ளிருந்த நித்தியஜீவனை ஆதியில் ஆதாமுக்குள் வைத்தார். ஆனால் ஆதாம் அதை இழந்துபோனான். பிசாசு வஞ்சனை செய்து ஏவாளை ஏமாற்றினான். ஆதாமும் அந்த விலக்கப்பட்ட விருட்சத்தைப் புசித்து பாவம் செய்தான்.

 

“ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்” (ஆதியாகமம் 2:17).

 

ஆனால் ஆதாம் அந்த பழத்தை சாப்பிட்டவுடன் செத்துவிட்டானா? இல்லை. வெளியே நாசியில் இருக்கும் ஜீவனில் அவன் சாகவில்லை. ஆனால் உள்ளே இருக்கும் ஆவியாகிய நித்திய ஜீவனில் செத்தான். Zoe-ஐ இழந்துவிட்டான், பிசாசின் பிள்ளையாகிவிட்டான், தேவனுடைய சுபாவத்தை இழந்துபோனான். இதுவரைக்கும் தேவனோடு எப்போது உறவாடுவோம் என்று ஏதேன் தோட்டத்திலே காத்திருந்த ஆதாம் முதன் முதலில் கர்த்தரிடம் தைரியமாக பேசுகிறான். “நீர் எனக்குத் தந்த ஸ்திரீயானவள்” என்று சொல்லுகிறான். இந்த வார்த்தை அவனுக்குள்ளிருக்கும் பிசாசிடமிருந்து வந்தது. அவனுக்குள் நித்திய சாவு வந்துவிட்டது. அவன் மரித்த பிறகு நரகத்திற்குத்தான் போக வேண்டும். கர்த்தர் அவனை கொல்லவில்லை, அவனுக்குப் பதிலாக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொன்றார். அந்த ஆட்டுக்குட்டி தான் பிற்காலத்தில் வரப்போகிற தேவஆட்டுக்குட்டியாகிய இயேசு என்பதை காட்டுவதற்காகவே அப்படிச் செய்தார். தண்டிக்கப்பட வேண்டிய ஆதாமிற்கு பதிலாக, ஒரு தவறும் செய்யாத ஆட்டுக்குட்டி தண்டிக்கப்பட்டது. இதுதான் கிறிஸ்தவ செய்தியின் மூலைக்கல். இதே கருத்து தான் வெளிப்படுத்தின விசேஷம் வரை சொல்லப்பட்டிருக்கிறது. குற்றமற்ற இயேசு கிறிஸ்து மனமுவந்து தன்னுடைய உயிரையே நமகக்காக கொடுத்தார். இப்போது தேவன் மனிதனுக்கு செய்ய வேண்டிய மிகப்பெரிய உதவி அவன் இழந்துபோன நித்தியஜீவனைப் பெற்றுத் தருவதாகும். இதைத்தான் லூக்கா 19-இல் வாசிக்கிறோம்.

 

“இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்” (லூக்கா 19:10).

 

“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16).

 

‘இவ்வளவாய்’ என்றால் ‘அளவுக்கு அதிகமாக’ என்று அர்த்தம். தேவன் இயேசுவையே நமக்காக தந்தார். இயேசுவில் என்ன விசேஷம் இருக்கிறது? “நானே வழியும் சத்தியமும் நித்திய ஜீவனுமாயிருக்கிறேன்” என்று இயேசு சொன்னார். தேவன் தனக்குள்ளிருந்த நித்தியஜீவனை இண்டாம் ஆதாமாகிய இயேசுவுக்குள் வைத்து, அவரை பூலோகத்தில் மனிதனாக பிறக்க வைத்து, மனிதனிடம் இந்த நித்தியஜீவனை மீண்டும் சேர்த்தார். ஆகவே இயேசுவை ஏற்றுக்கொண்ட எல்லோரும் ஆதாம் இழந்துபோன நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்வார்கள். அவனுக்கு நரகம் இல்லை. பரலோகத்தின் வாசல் காத்திருக்கிறது. தேவன் நம்மீது இவ்வளவாய் அன்பு வைத்தார்.

 

“ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்” (யோவான் 5:26).

 

தேவன் நம்முடைய தகுதியைப் பார்க்கவில்லை. அவர் நம்மீது வைத்த அளவற்ற அன்பினாலே தம்முடைய சொந்த குமாரனாகிய இயேசுவை நமக்காக கொடுத்தார். அந்த இயேசுவை விசுவாசிப்பதின் மூலமாக நித்தியஜீவனாகிய Zoe-ஐ இலவசமாக நாம் பெற்றுக்கொள்ளலாம். பணம் என்பது பெரிதான ஒன்று அல்ல. பணத்தை ஒரு கருவியாக வைத்துக்கொண்டு தேவனுடைய ராஜ்யத்தைக் கட்ட வேண்டும்.

 

“பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன். உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு; தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான். பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டைவாங்கி, எண்பது என்று எழுது என்றான். அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்” (லூக்கா 16:1-8).

 

இங்கே இந்த உக்கிராணக்காரன் தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறான். அதனால் கடன்பட்டவர்களிடமாவது ஒரு இடம் கிடைக்கும் என்று நினைத்து அவர்கள் கணக்கையெல்லாம் மாற்றி எழுதுகிறான். அதன் மூலம் அவர்களிடம் நல்ல பெயர் வாங்கிக்கொள்கிறான். இதை முதலாளி கேள்விப்பட்டு அவனைப் பாராட்டுகிறார். இயேசு இந்தக் கதையைச் சொல்லிவிட்டு, “என்னுடைய பிள்ளைகளைக் காட்டிலும் இந்த உலகத்தானாய் வாழ்பவர்கள் ஞானிகளாய் இருக்கிறார்கள்” என்று சொல்லுகிறார். ஏனென்றால் அவர்கள் அழிந்துபோகிற எதிர்கால வாழ்க்கைக்காக தங்கள் பணத்தைச் செலவழித்து நண்பர்களை சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் என்னுடைய பிள்ளைகளுக்கோ சூரியனைப்போல பிரகாசிக்கிற மிகப்பெரிய எதிர்காலத்தை வைத்திருக்கிறேன். அதற்காக சிறிது பணத்தை செலவழித்து ஆத்துமாக்களை ஆதாயம் செய்து இயேசுவிடம் தங்கள் நண்பர்களை அழைத்துவர மனதில்லாமல் இருக்கிறார்கள். ஆகவேதான் இயேசு இந்த கதையைச் சொன்னார். தேவன், சிநேகிதர்களை சம்பாதிப்பதற்காக பணத்தைக் கொடுத்திருக்கிறார். ஆகவே இந்த பூமியிலிருக்கும் போதே பணத்தை வைத்து ஆத்துமாக்களை இயேசுவுக்காக ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். எவ்வளவு பணம் இருந்தாலும் நாம் மரித்த பிறகு எந்த ஒரு நண்பர்களையும் சம்பாதிக்க முடியாது. ஆகவே பணத்தை ஒரு நோக்கத்தோடு செலவழிக்க வேண்டும். நாம் ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்திக் கொண்டு பரலோகத்திற்குச் செல்ல வேண்டும். வெறுங்கையாய் அங்கு போகக்கூடாது.

 

“பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” (மத்தேயு 6:19-21).

 

பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள் என்றால் அதின் அர்த்தம் என்ன? பரலோகத்தில் நம்முடைய பணத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. அங்கு பணத்தைக் கொண்டுபோய் சேர்த்து வைக்கவும் முடியாது. அங்கே எல்லாம் சுத்தப் பொன்னாயிருக்கிறது. ஆகவே பரலோக வங்கியில் நாம் சேர்த்து வைக்க வேண்டும். இந்த வங்கி பரலோகத்திலுமில்லை, பூலோகத்திலுமில்லை, இது ஆவி உலகத்தில் இருக்கிறது. தேவனுடைய ஆலயம் கட்டப்படுவதற்காக, சுவிசேஷேம் உலகமெங்கும் சொல்லப்படுவதற்காக, இயேசுவே ஆண்டவர் என்று எல்லா முழங்கால்களும் முடங்குவதற்காக ஒரு பெரிய பரலோக வங்கியை வைத்திருக்கிறார். அதின் உரிமையாளர் இயேசு மாத்திரமே. இதைப் பற்றித்தான் வேதம் சொல்லுகிறது:

 

“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்” (லூக்கா 6:38).

 

ஆகவே இயேசுவினுடைய பரலோக வங்கியில் கொடுக்கும்போது நமக்கு நஷ்டமே வராது. அளவுக்கதிகமான லாபம் மாத்திரமே வரும். நாம் தேவனுக்காக, அவருடைய ராஜ்யம் கட்டப்படுவதற்காக பணத்தை செலவழிக்கும்போது அமுக்கி, குலுக்கி, சரிந்து விழும்படி நன்றாய் அளந்து கொட்டுகிறார்.

 

“என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (மல்கியா 3:10).

 

ஒரு அணையின் மதகைத் திறக்கும்போது எப்படி தண்ணீர் பாய்ந்து இடங்கொள்ளாமல் போகுமட்டும் நிரப்புகிறதோ அதேபோல் நாம் கர்த்தருடைய ஊழியத்திற்காக நம்முடைய தசமபாகங்களையும், காணிக்கைகளையும் கொடுக்கும்போது வானத்தின் மதகுகளைத் திறந்து இடங்கொள்ளாமல் போகுமட்டும் ஐசுவரியத்தால் நிரப்புவார். நம்முடைய குடும்பம், தொழில் எல்லாம் செழித்தோங்கும். “எவனையும் மேன்மைப்படுத்தவும், பெலப்படுத்தவும் என்னாலே ஆகும்” என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகவே நம்முடைய பணத்தை அவருடைய ராஜ்யம் கட்டப்படுவதற்காக செலவழிக்க வேண்டும். அப்போது தேவன் இடங்கொள்ளாமல் போகுமட்டும் நம்மையும், நம்முடைய குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்.

 

Book your tickets